2015-05-22 15:45:00

உலகளாவிய கலாச்சாரப் பன்மைத்தன்மைக்கு அச்சுறுத்தல்


மே,22,2015. இப்பூமிக் கோளத்தின் கலாச்சார வளங்கள் தீவிரவாதக் குழுக்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும்வேளை, உலகின் எண்ணற்ற பாரம்பரிய வளங்களைக் காப்பதற்கு உலகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது ஐ.நா.வின் கலாச்சார நிறுவனம்.

யுனெஸ்கோ இயக்குனர் இரினோ பொக்கோவா அவர்கள், உலக கலாச்சாரப் பன்மைத்தன்மை நாளையொட்டி இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், கலாச்சாரப் பன்மைத்தன்மையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிரியாவிலும், ஈராக்கிலும் இடம்பெறும் சண்டையில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள், சிரியாவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழம்பெருமைகொண்ட Palmyra நகரைக் கொள்ளையடித்துள்ளனர், இது, மத்திய கிழக்கில் மிக முக்கியமான பாரம்பரிய வளங்களையும், மக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் பொக்கோவா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

2002ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட உலக கலாச்சாரப் பன்மைத்தன்மை நாள், ஒவ்வோர் ஆண்டும் மே 21ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிக்க Palmyra நகரம், உலக அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது மற்றும் இது பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக வரலாற்று முக்கியத்துவமும் பெற்றுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.