2015-05-21 16:05:00

இலங்கையில் முதன்முறையாக இறந்தோரின் நினைவு நாள்


மே,21,2015 இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தோரின் நினைவு நாள், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் முதன் முறையாக இவ்வாண்டு மே 18ம் தேதி கடைபிடிக்கப்பட்டது என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

2009ம் ஆண்டு மே 18ம் தேதி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதையும், முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தோரையும் நினைவுகூரும் வண்ணம், அந்நாளை, இறந்தோரின் நினைவு நாள் என்று கொண்டாட இலங்கைத் தமிழர்கள் முயன்று வந்தனர்.

கடந்த ஆண்டுகளில் இந்த நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதில் விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் இவ்வாண்டு நீக்கப்பட்டு, இந்த நினைவைக் கடைபிடிக்க முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டது என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

30 ஆண்டுகளாகத் தொடர்ந்த இலங்கை உள்நாட்டுப் போர், மே 18ம் தேதி முடிவுற்றதைத் தொடர்ந்து, இந்நாளை, "வெற்றிநாள்" என்று கொண்டாட முந்தைய அரசு தீர்மானித்தது என்றும், தற்போதைய அரசு இந்நாளை "நினைவு நாள்" என்று கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.