ஒரு பணக்காரர் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்க, கிராமத்தில் உள்ள ஓர் ஏழையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும், ஏழை எப்படி வாழ்கிறார் எனக் கேட்டார் தந்தை.
‘அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்தக் கிராமத்தில் எண்ணிலடங்கா விண்மீன்கள் மின்னுகின்றன. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது. நாம் ஒரு நாள் கடந்த பாலைப் பருகுகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாப்பிடுகிறார்கள். நாம் வாடியக் காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை, செடியிலிருந்து பறித்து உண்ணுகிறார்கள். நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது’ என்று மகன் சொல்லிக்கொண்டேச் சென்றான்.
மகனின் பதில், தந்தையை அதிர்ச்சியடையச் செய்தது. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார், யார் உண்மையான ஏழை என்று...
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |