2015-05-18 16:02:00

பாலஸ்தீன அமைதிக்காக புதிய புனிதர்களிடம் செபியுங்கள்


மே,18,2015. மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்காக இரு புதிய புனிதர்களின் பரிந்துரையை வேண்டி செபியுங்கள் என இத்திங்கள் காலையில் தன்னை சந்தித்த பாலஸ்தீன அருள்சகோதரிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலஸ்தீனாவில் சண்டைகள் முடிவுக்குவந்து, மக்களிடையே அமைதி நிலவ ஒவ்வொருவரும் செபிப்போம் என பெண்துறவிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சித்ரவதைகளை அனுபவிக்கும் மத்தியக்கிழக்குப் பகுதியின் மக்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், வெளியே முற்றிலுமாக தெரியவில்லையெனினும், இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, இத்தகைய வன்முறைகள் முடிவுக்கு வர, மேலும் செபங்கள் தேவைப்படுகின்றன என்றார்.

அங்கு குழுமியிருந்த அருள்சகோதரிகள் அனைவரிடமும், அவரவர் தாய்மொழியில் 'அருள்நிறை மரியே' செபத்தை உரக்கக்கூறி செபியுங்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களோடு இணைந்து செபித்து அவர்களுக்கு தன் ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.