மே,16,2015. வத்திக்கான் வானொலியில் இந்தியப் பிரிவு தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இந்தியப் பிரிவில் பணியாற்றும் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளி பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து, குழுவாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
பணியாளர்கள் ஒவ்வொருவரையும் கை குலுக்கிய திருத்தந்தை, அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்த பின்னர் சில நிமிடங்கள் பணியாளர்களுடன் உரையாடினார்.
இந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி தமிழ்க்குழு வெளியிட்ட கற்றனைத்தூறும் நூலின் முதல் பிரதியைக் காட்டியபோது, இது எனக்கா என்று கேட்டு அதை மகிழ்வோடு பெற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு, வத்திக்கான் வானொலி தலைமையகத்திலுள்ள சிற்றாலயத்தில் பொன் விழா திருப்பலியும் அதன் பின்னர் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. அனைத்துலக இயேசு சபை அதிபருக்குத் துணைவரும், இயேசு சபையின் தெற்காசியா பொறுப்பாளருமான அருள்பணி லிஸ்பர்ட் டி சூசா அவர்கள் இத்திருப்பலியை நிறைவேற்றினார்.
வத்திக்கான் வானொலியின் இந்தியப் பிரிவுடன் தொடர்புடைய பலர் இதில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |