மே,09,2015. இந்தியாவில் கடும் குற்றத்தில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்து 16 ஆகக் குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
16லிருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக அமைப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே இந்தச் சட்ட திருத்த மசோதாவின் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றம் இழைத்தவர் 16 வயதா அல்லத 18 வயதா என சிறார் நிதி ஆணையம் உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது, உளவியல் மற்றும் சமூக நிபுணர்கள் இருக்க வேண்டும். மேலும், இந்திய மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில அரசின் சிறார் நீதிச் சட்டம் 2000 என்பது காலாவதியாகிறது.
இதுதவிர, சட்டவிரோத தத்தெடுப்பு, சிறார் பராமரிப்பு இல்லங்களில் சிறார்க்கு அளிக்கப்படும் தண்டனை, தீவிரவாத அமைப்புகளுக்கு சிறாரைப் பயன்படுத்துவது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கவும் சட்ட திருத்த மசோதாவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மே, 07, இவ்வியாழனன்று நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதாவைக் குறைகூறியுள்ள சிறார் உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க் கட்சிகள், இது சிறார் உரிமைகள் குறித்து அக்கறையின்றி இருப்பதைக் காட்டுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |