2015-05-08 15:48:00

லெபனான்-அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது ஆபத்து


மே,08,2015. லெபனான் நாட்டு அரசியல்வாதிகள் புதிய அரசுத்தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்காவிடில், அந்நாடு புதியதோர் ஆபத்தில் தள்ளப்படும் என்று, மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

லெபனான் அரசியல்வாதிகள் ஒருவர் ஒருவரைக் குற்றம் சுமத்துவதை விடுத்து, புதிய அரசுத்தலைவரை தேர்ந்தெடுக்குமாறு, பன்னாட்டுச் சமுதாயமும் அவர்கள்மீது அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர் ஆயர்கள்.

தங்களின் மாதாந்திரக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், 2014ம் ஆண்டில் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த அரசுத்தலைவர் Michel Suleiman அவர்களுக்குப் பின்னர் புதிய தலைவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது நாட்டை கடும் ஆபத்தில் தள்ளி விட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

லெபனான் அரசியல் அமைப்பின்படி அடுத்த அரசுத்தலைவர் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். ஆயினும், அந்நாட்டின் இரு முக்கிய கிறிஸ்தவக் கட்சிகள், முரண்பட்டு நிற்பதால் இவ்விரு கட்சிகளும் ஏற்கும் ஒரு வேட்பாளர் இன்னும் முன்மொழியப்படவில்லை.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.