2015-05-04 15:57:00

திருத்தந்தை:தன் இறையரசை நிறுவ படைவீரர்களைத் தேடுகிறார் இயேசு


மே,04,2015. தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் தங்கள் வரலாற்றில் திருத்தந்தைக்காகப் பணியாற்றி வந்துள்ளனர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவிஸ் மெய்க்காப்ப்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளை எடுக்கும் விழாவை முன்னிட்டு அவர்களை இத்திங்களன்று அவர்களின் குடும்பங்களோடு திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வரலாற்றில் திருத்தந்தையைக் காப்பாற்றுவதற்காக சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரையேக் கையளித்துள்ளது பற்றி எடுத்துரைத்து தன் பாராட்டுதல்களை வெளியிட்டார்.

தன் அரசை நிறுவ முயலும் மன்னராம் இயேசு தன்னுடன் ஒத்துழைக்க படைவீரர்களை அழைப்பதாக லொயோலா புனித இஞ்ஞாசியார் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, பகல் நேரங்களில் வியர்வைச் சிந்தியும், இரவு நேரங்களில் விழித்திருந்தும் வெற்றிக்காக உழைக்கும் மக்களை இறைவன் தன் இறையரசை நிறுவத் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

புனித இஞ்ஞாசியாரைப் பொறுத்தவரையில் இரண்டு இராணுவ முகாம்களே உள்ளன, ஒன்று, இயேசுவின் கொடி தாங்கியது, ஏனையது தீயோனின் கொடி தாங்கியது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு, இயேசுவின் கொடியின்கீழ் ஒன்றிணைவதைத் தவிர வேறு தேர்வு இல்லை என்றார்.

சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் தங்கள் பணியின்போது ஏழைகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவி, சேவையாற்றவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.