2015-04-30 14:43:00

கடுகு சிறுத்தாலும் – பொறுமையில் புகார் இல்லை


ஓர் ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி. ஒரு நாள் இருவரும் காட்டுக்கு விறகு வெட்டச் சென்றனர். இருவரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அவற்றை இரு கட்டுகளாகக் கட்டினர். பின்னர் தாங்கள் எடுத்துச் சென்ற கட்டுச் சாதத்தை உண்டு களைப்பைப் போக்கினர். அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் விறகுக் கட்டுகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயினர். சிறிது தூரம் நடந்து சென்றவுடனேயே, விறகுக் கட்டுப் பாரமாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டே நடந்தார் அண்ணன். ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந்தது,  ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளிதாக நடந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியிடம், உனக்கு விறகுக் கட்டுப் பாரமாக இல்லையா? என்று கேட்டார். அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பாரமாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படியா! அந்த மூலிகை இலை என்னவென்று சொன்னால் நானும் எனது சுமையில் வைத்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன். அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் பொறுமை என்றார். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடையூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று வெல்வது பொறுமை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.