2015-04-29 15:43:00

ஆயருக்குரிய முதல் பண்பு, பணிவுள்ள ஆடாக வாழப் பழகுவது


ஏப்.29,2015. ஆடுகளை மேய்க்கும் ஆயருக்குரிய முதல் பண்பு, பணிவுள்ள ஓர் ஆட்டைப் போல வாழப் பழகுவது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 27, இத்திங்கள் முடிய, கியூபா நாட்டில் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்ட, அருள் பணியாளர் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமீனொ ஸ்டெல்லா அவர்கள், ஹவானா உயர் மறைமாவட்ட அருள் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

சீடர், ஆயர், இறைவாக்கினர் என்பவை, அருள் பணியாளர்களுக்குத் தேவையான மூன்று பண்புகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், தன் உரையின் ஆரம்ப எண்ணமாகக் குறிப்பிட்டார்.

கடவுளைப் பற்றி மனிதர்களிடமும், மனிதர்களைப் பற்றி கடவுளிடமும் எடுத்துச் சொல்லும் பாலமாக அமைவது, அருள் பணியாளர்களின் முக்கியப் பணி என்றும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, திருத்தூதுப் பயணம் செல்லும் வழியில், கியூபாவிற்கும் செல்வார் என்று திருப்பீடம் அண்மையில் அறித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.