2015-04-23 16:28:00

புனித ஜார்ஜைப் போலவே திருத்தந்தையும் செயல்படுகிறார்


ஏப்.23,2015. தீயச் சக்திகளுக்கு எதிராகப் போரிட்ட புனித ஜார்ஜைப் போலவே, அவரது பெயரைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இன்றையத் தீயச் சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் புனித ஜார்ஜ் அவர்களின் திருநாளில், ஹோர்கெ என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருநாளைக் கொண்டாடுவதையொட்டி, திருத்தந்தையின் திருவழிபாடுகளில் உதவி செய்யும் அருள் பணியாளர் Guillermo Karcher அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.

ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவரும், திருத்தந்தையுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்பு கொண்டவருமான அருள்பணி Karcher அவர்கள், கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், புவனெஸ் அயிரஸ் பேராயராகப் பணியாற்றியபோது, அவரிடம் காணப்பட்ட தந்தைக்குரிய பாசம், அவர் திருத்தந்தையாகப் பணியேற்ற பின்னரும் தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பு பெற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு எதிராகச் சொல்லப்படும் மாற்றுக் கருத்துக்களையும் சலனமற்ற நடுநிலையோடு ஏற்றுக்கொண்டு, தன் பணிகளைத் தொடர்வது, அவரது தனிச்சிறப்பு என்று அருள்பணி Karcher அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.