ஏப்.20,2015. உரோம் நகர் வாழ் யூதர்களின் முன்னாள் தலைமைக்குரு Elio Toaff அவர்களின் மறைவையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல்தந்தியை, உரோம் யூத சமுதாயத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யூத தலைமைக்குரு, Elio Toaff அவர்களின் குடும்பம் மற்றும் உரோம் யூத சமுதாயத்தின் துன்பங்களில் தான் கலந்து கொள்வதாக தன் இரங்கல் தந்தியில் கூறியுள்ள திருத்தந்தை, யூத வரலாற்றிலும் இத்தாலியக் கலாச்சாரத்திலும் முக்கிய இடம்பிடித்துள்ள Elio Toaff அவர்கள், தன் நன்னெறி வாழ்க்கைக்காகவும், ஆழமான மனிதாபிமான உணர்வுகளுக்காகவும் அதிகமாக அறியப்பட்டவர் என மெலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களுடன், உரோம் யூதக் கோவிலில், தலமைக்குரு Elio Toaff அவர்கள் நடத்திய உரையாடல்களையும் தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க மதத்திற்கும், யூத மதத்திற்கும் இடையே உரையாடலை ஊக்குவித்ததில் அவரின் சிறப்புப் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.
1915ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி இத்தாலியின் Livornoல் பிறந்த யூத தலைமைக்குரு Elio Toaff அவர்கள், இஞ்ஞாயிறு, ஏப்ரல் 19ம் தேதியன்று, காலமானார்.
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |