2015-04-15 16:39:00

கடுகு சிறுத்தாலும்.... : திறமைகளை மதிக்கக் கற்போம்


ஒரு நாள் காலை 8 மணிக்கு வாஷிங்டன் இரயில் நிலையம் அருகில் ஒரு வயலின் கலைஞர் தன்னுடைய வயலினை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.

பரபரப்பான காலைப் பொழுது என்பதால் மக்கள் வேகவேகமாக சென்று கொண்டிருந்தனர். மூன்று நிமிடம் கழித்து, அந்த இசை கலைஞருக்கு வயதான ஒரு பெண்மணி 1 டாலர் போட்டுவிட்டு சென்றார்.

ஒரு சிலர் அவரை கடந்து போகும்போது சிறிது நேரம் நின்று, கைக்கடிகாரத்தில் மணியை பார்த்து விட்டு, வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஒரு 3 வயது சிறுவன் மட்டும் சிறிது நேரம் நின்று, அவரைப் பார்த்தான். அதற்குள் அவன் தாய் தரதரவென்று இழுத்து கொண்டு சென்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு 20 பேர் பணம் போட்டுவிட்டு சென்றனர். பெரும்பாலும் அவரைக் கடந்து செல்லும்போது நின்று இரசித்தவர்கள், சிறுவர்களே.

45 நிமிடம் அவர் தொடர்ச்சியாக வாசித்து முடித்தவுடன் ஒருவர் கூட கை தட்டவில்லை, யாரும் பாராட்டவில்லை. அவர் வாசித்து முடித்துவிட்டார் என்பதைக்கூட அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை. அவருக்கு கிடைத்தது மொத்தம் 32 டாலர்.

அங்கு வயலின் வாசித்தது, உலகத்தின் மிகச் சிறந்த வயலின் வித்வான், ஜோஷுவா பெல், என்பது அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் வாசித்த வயலினின் விலை 3.5 மில்லியன் டாலர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அரங்கில் நடந்த இசை நிகிழ்ச்சியை ரசிக்க நுழைவு கட்டணம் 5000 ரூபாய்.

இது ஒரு உண்மை சம்பவம். வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை, பொது மக்களின் இசை பற்றிய ஆர்வம், அவர்களின் நடவடிக்கைகள்,  கருத்துகளை தெரிந்துகொள்ள இந்த முயற்சியை மேற்கொண்டது.

ஒரு பொது இடத்தில் எவ்வளவு பெரிய இசை கலைஞன் இசை நிகழ்ச்சி நடத்தினாலும் இது தான் நிலை. மக்கள் யாரும் உண்மையான திறமைக்கு மதிப்பு கொடுப்பதில்லை.

எதிர்பாராத இடத்தில் எத்தனையோ இசை கலைஞர்கள் அருமையாக வாசிக்கிறார்கள், ஆனால் அதை யாரும் காது கொடுத்து கேட்பதுமில்லை, பாராட்டுவதுமில்லை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.