2015-04-14 15:30:00

ஜூன் 6ல் சரயேவோவில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.14,2015. “நம் ஆண்டவர் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால் மன்னிப்புக் கேட்பதற்கு நாம்தான் சோர்வடைந்து விடுகிறோம்” என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூன் 6ம் தேதி சனிக்கிழமை Bosnia-Erzegovina தலைநகர் சரயேவோவுக்கு மேற்கொள்ளும் ஒருநாள் திருத்தூதுப்பயணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூன் 6ம் தேதி காலை 07.30 மணிக்கு உரோம் பியுமிச்சினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 9 மணிக்கு சரயேவோ பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகளால் வரவேற்கப்படுவார். பின்னர் 9.30 மணிக்கு அரசுத்தலைவர் மாளிகை வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.  

அம்மாளிகையில் அரசுத்தலைவரைச் சந்தித்தல், அரசு அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்துதல், Koševo அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றல், மதியம் 1.15 மணிக்கு அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவு அருந்துதல், மாலை 4.20 மணிக்கு குருக்கள், துறவியரைச் சந்தித்தல், பின்னர் பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும்  பிற மதப் பிரதிநிதிகளைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் இளையோரைச் சந்தித்து இரவு 8 மணிக்கு உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரவு 9.20 மணியளவில் திருத்தந்தை உரோம் Ciampino விமான நிலையம் வந்தடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.