2015-04-06 15:44:00

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மேலும் உதவிகள் தேவை, ஐ.நா.


ஏப்.06,2015. இன்று உலகில் 162 நாடுகள் நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவேளை, உலகை நிலக்கண்ணி வெடிகளின் அச்சுறுத்தலினின்று பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவ்வெடிகளை அகற்றுவதற்கு உதவி குறித்த அனைத்துலக தினத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 4ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு கூறினார் பான் கி மூன்.

கடந்த ஆண்டில் மட்டும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகளும்,  இரண்டாயிரம் டன்களுக்கு மேற்பட்ட, போர்க்காலங்களில் வெடிக்காத குண்டுகளும் அழிக்கப்பட்டுள்ளன என்றுரைத்துள்ள பான் கி மூன் அவர்கள், ஐ.நா. நிறுவனம் மட்டுமே 1,500 கிலோ மீட்டருக்கு அதிகமான சாலைகளைப் பரிசோதித்துள்ளது என்றும் கூறினார்.

இந்நடவடிக்கைக்கு உதவியுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பான் கி மூன் அவர்கள், நிதி மற்றும் அரசியல் முறைப்படி மேலும் இதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார். 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.