2015-04-06 14:20:00

கடுகு சிறுத்தாலும்–முகமன்கூறுதல் ஒருபோதும் நிலைத்து நிற்காது


Daigu, Gudo. இவர்கள் இருவரும் ஜென் ஞானிகள். ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர் இவர்கள் இருவரையும் அழைத்திருந்தார். செல்வந்தர் மாளிகைக்குச் சென்று அவரைப் பார்த்தவுடன் ஞானி கூடோ அவர்கள், பிரபு, நீங்கள் பிறவியிலேயே அறிவாளிதான். தங்களிடம் ஜென் அருள்நெறியைக் கற்றுக்கொள்ளும் திறமை இயற்கையாகவே இருக்கிறது என்றார். உடனடியாக அவரைக் கடிந்துகொண்ட ஜென் ஞானி தெய்கூ அவர்கள், அறிவோடு பேசு. ஒன்றும் தெரியாத இந்தச் செல்வந்தரிடம் இல்லாத ஒன்றைச் சொல்லி, இப்படி வீணாகப் புகழாதே. இவர் ஒரு பிரபுவாக இருக்கலாம், ஆனால் இவருக்கு ஜென்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றார். பின்னர் அந்தச் செல்வந்தர் ஞானி கூடோவுக்கு ஒரு ஜென் கோவிலைக் கட்டிக்கொடுப்பதற்குப் பதிலாக, உண்மையைச் சொன்ன ஞானி தெய்கூவுக்கு கோவில் கட்டிக்கொடுத்தார்.ஆம். பிறரை முகமன் கூறுபவர்தான் பிறரிடமிருந்து முகமனை எதிர்பார்ப்பார். தன்னை அறிந்துகொள்ள முயற்சிக்கும் எவரும் பிறரிடமிருந்து ஒருபோதும் முகமனை எதிர்பார்க்கமாட்டார். ஏனெனில் முகமன் கூறுபவர் எப்போதும் பிறரையே நினைத்துக்கொண்டிருப்பார். அதனால் அவரிடம் தன்னைப் பற்றிய உணர்வு அற்றுப்போகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.