2015-03-28 15:28:00

புனித அவிலா தெரேசா துறவற வாழ்வைப் புதுப்பிக்க உதவுகிறார்


மார்ச்,28,2015. தன்னையே முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணித்த புனித அவிலா தெரேசாவின் வாழ்வு, இக்காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் புதுப்பிப்பதற்கு உதவுகின்ற மாபெரும் சொத்து என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 28, இச்சனிக்கிழமையன்று அவிலா நகர் புனித தெரேசா அவர்கள் பிறந்ததன் 500ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, காலணி அணியாத அனைத்துலக கார்மேல் சபை தலைவர் அருள்பணி Saverio Cannistrà அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

புனித அவிலா தெரேசா, முதலில் செபத்தின் ஆசிரியர் என்று விவரித்துள்ள திருத்தந்தை, புனித அவிலா தெரேசாவின் செபம், ஒரு காலத்துக்கு, ஒரு கட்டத்துக்கு மட்டும் ஏற்றது அல்ல, மாறாக, இச்செபம் பல்வேறு தருணங்களில் செபிக்கப்படுகின்றது, இப்புனிதர் இடைவிடாச் செபத்தில் அசையாத பற்றுறுதி கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.

ஆன்ம வறட்சி காலத்திலும், வாழ்வில் துன்பங்களை எதிர்கொள்ளும்போதும் நாம் செபத்தில் உறுதியாய் இருக்குமாறு அழைப்புவிடுக்கும் இப்புனிதர், உண்மையான குழுவாழ்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு கடைப்பிடிக்கப்படும் இவ்வாண்டில் இப்புனிதர் பிறந்ததன் 5ம் நூற்றாண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவது பொருத்தமாக உள்ளது, கடந்த காலத்தை நன்றியோடு திரும்பிப் பார்த்து சபைகளை ஆரம்பித்தவர்களின் உள்தூண்டுதல்களைக் கண்டுணருவதற்கு இந்நிகழ்வு நல்லதொரு காரணமாக உள்ளது  என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இஸ்பெயின் நாட்டின் அவிலாவில் 1515ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பிறந்த புனித தெரேசா, தியானயோகி மற்றும் கார்மேல் சபையைச் சீர்திருத்தியவர். இயேசுவின் தெரேசா எனவும் அழைக்கப்படும் இப்புனிதரை 1970ம் ஆண்டில் திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல். மிகவும் புகழ்பெற்ற The Interior Castle என்ற ஆன்மீக நூல் உட்பட பல கிறிஸ்தவ ஆன்மீக மற்றும் தியானயோக நூல்களை எழுதியுள்ளார் புனித அவிலா தெரேசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.