2015-03-28 15:59:00

அல்பினிச நோயாளிகள் கொலைக்கு மலாவி ஆயர்கள் கண்டனம்


மார்ச்,28,2015. மலாவி நாட்டில் அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடத்தி கொலைசெய்யும் நடவடிக்கைகள் மிகுந்த கவலை தருவதாக அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆப்ரிக்க நாடான மலாவியில், செல்வ வளம், பணம் போன்ற ஆசைகளால் தவறாக வழிகாட்டப்பட்டு, அல்பினிச நோயாளிகள் கொலை செய்யப்படுகின்றனர் என்றுரைக்கும் அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, இக்கொலைகளை எக்காரணங்கள் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

தங்களின் உடல் உறுப்புக்களில் புதிரான அல்லது மந்திர சக்திகளைக் கொண்டிருக்கும் அல்பினிச நோயாளிகள், யாராவது ஒருவரை செல்வந்தராக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் மலாவி நாட்டில் இந்நோயாளிகள் கொலை செய்யப்படுகின்றனர்.

மேலும், அல்பினிச நோயாளிகளைத் தாக்குவோருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மலாவி அரசுத்தலைவரைப் பாராட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், இக்குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அல்பினிச நோயாளிகள் பாதுகாக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

மலாவியில் கடந்த வாரத்தில் மட்டும் கடத்தப்பட்ட 3 பேர் உட்பட, கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 15 அல்பினிச நோயாளிகள் கடத்தப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.

அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணுக் குறைபாட்டு நோய். இவர்களுக்கு வெண்பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும். இவர்களது தோலில் அதிக அளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.