2015-03-27 14:57:00

வீடற்றவர்களிடம் திருத்தந்தை:உங்கள் இல்லம் உங்களை வரவேற்கிறது


மார்ச்,27,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்கள் அலுவலகத்தின் அழைப்பின்பேரில், வீடற்று வாழும் 150 வறியோர் வத்திக்கான் அருங்காட்சியகத்தை இவ்வியாழனன்று பார்வையிட்டபோது முன்னறிவிப்பு எதுவுமின்றி அங்குச் சென்று அம்மக்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தெருவில் வாழும் இந்த ஏழைகள் வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு அவர்களைச் சந்தித்து, இது உங்கள் இல்லம், இது ஒவ்வொருவரின் இல்லம், இதன் கதவுகள் எல்லாருக்காகவும்  எப்பொழுதும் திறந்தே உள்ளன, வாருங்கள் என அவர்களை வத்திக்கானுக்கு அழைத்தார்.

உங்களைப் போன்ற மக்களின் செபம் எனக்குத் தேவைப்படுகின்றது, எனக்காகச் செபியுங்கள் என்று கேட்டு அவர்களை ஆசிர்வதித்த திருத்தந்தை, நம் ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பாராக, உங்கள் வாழ்வின் பாதையில் அவர் உங்களுக்கு உதவுவாராக, அவரின் கனிவான அன்பை உணருவீர்களாக எனவும் வாழ்த்தினார்.

வருகிற டிசம்பர் 17ம் தேதி தனது 78வது பிறந்த நாளைச் சிறப்பிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்களுடன் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் செலவழித்தார் என்று, திருப்பீட உதவி செய்தித் தொடர்பாளர் அருள்பணி Ciro Benedettini அவர்கள் கூறினார்.

இந்த 150 பேரும் தங்கள் வாழ்வில் முதன்முறையாக வத்திக்கான் தோட்டம் மற்றும் பிற பகுதிகளையும் பார்வையிட்டனர். பின்னர், அவர்களுக்கு சிறப்பு விருந்தொன்றும் வழங்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski அவர்கள், இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.