2015-03-27 14:59:00

ஆசியா பீபியின் விடுதலைக்கு ஐந்து இலட்சம் வலைத்தளத்தில் ஆதரவு


மார்ச்,27,2015. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை சட்டத்தின்பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண்ணின் விடுதலைக்கு வலைத்தளம் மூலம் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஆசியா பீபியின் விடுதலைக்காக விண்ணப்பித்து, Emily Clarke என்ற பிரித்தானிய பல்கலைக்கழக மாணவி ஆரம்பித்துள்ள சமூக வலைத்தளத்தில், ஐந்து இலட்சத்து எழுபத்து இரண்டாயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் David Cameron, வெளியுறவுச் செயலர் John Hammond ஆகிய இருவரும் ஆசிய பீபியின் விடுதலைக்காக முயற்சிக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இறைவாக்கினர் முகமது நபி அவர்கள் பற்றி ஆசியா பீபி அவர்கள், தன்னுடன் வேலை செய்த பெண்களிடம் அறுவடையின்போது தவறாகப் பேசியதாக 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது.

இவரது தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனைச் சட்டத்தின் மூலம் கொல்லப்பட்ட முதல் பெண்ணாக இவர் இருப்பார். ஆசியா பீபி அவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷேய்க்குப்புரா மாவட்டத்தில் பிறந்தவர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.