2015-03-25 15:36:00

பேராயர் ரொமேரோ மரணமடைந்த 35ம் ஆண்டு நினைவு


மார்ச்,25,2015. 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில், பேராயர் ஆஸ்கர் அர்னுல்போ ரொமேரோ (Oscar Arnulfo Romero) அவர்கள் திருப்பலியாற்றிய வேளையில் கொல்லப்பட்ட நிகழ்வின் 35ம் ஆண்டு நினைவு, உலகின் பல்வேறு இடங்களில் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.

எல் சால்வதோர் பல்கலைக் கழகத்தில், இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இளையோர், பேராயர் ரொமேரோ அவர்கள் வழங்கிய சமுதாயப் பாடங்களை கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

"ஆடுகளுக்கும் ஓநாய்களுக்கும் மேய்ப்பராக விளங்கிய ஆஸ்கர் ரொமேரோ" என்ற தலைப்பில் பேராயர் ரொமேரோ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அருள்பணி ஆல்பெர்த்தோ வித்தாலி அவர்கள், எல் சால்வதோர் நாட்டில், பேராயர் அவர்களின் குரல் ஒன்றே அன்று ஏழைகள் சார்பில் எழுந்தது என்று கூறினார்.

35 ஆண்டுகளுக்கு முன், அடக்குமுறை அரசின் உதவியுடன் கொல்லப்பட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், வருகிற மேமாதம் 23ம் தேதி, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முந்திய நாள் முத்திப்பேறு பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.