2015-03-25 15:38:00

திருத்தந்தை தர்மங்களுக்கு நிதிதிரட்டும் இலாட்டரி குலுக்கல்


மார்ச்,25,2015. ஜூன் 29ம் தேதி, புனிதர்கள் பேதுரு பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்கென நடத்தப்படும் இரண்டாவது இலாட்டரி குலுக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலாட்டரி குலுக்கலில் கலந்துகொள்வோர், அடுத்துவரும் நாட்களில், வத்திக்கானில் அமைந்திருக்கும் தபால் நிலையம், பல்பொருள் அங்காடி, புத்தகக் கடை, மருந்துக் கடை ஆகிய இடங்களில் இலாட்டரி 'டிக்கட்டுகளை' 10 யூரோ கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்கென சனவரி மாதம் நடத்தப்பட்ட முதல் இலாட்டரி குலுக்கலில் மக்கள் தாராள மனதோடு, ஆர்வமாகக் கலந்துகொண்டதால், திருத்தந்தை அந்த முயற்சியை மீண்டும் அறிவித்துள்ளார் என்று திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski அவர்கள் அறிவித்தார். 

மேலும், மார்ச் 26, இவ்வியாழனன்று, வீடற்ற வறியோர் 150 பேர், வத்திக்கான் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இந்த சிறப்பு நிகழ்வின் இறுதியில், அவர்களுக்கு சிறப்பு விருந்தொன்று வழங்கப்படும் என்றும் பேராயர் Krajewski அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : VIS / Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.