2015-03-23 15:57:00

மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு பெரும் உணவு நெருக்கடி - FAO


மார்ச்,23,2015. வருகிற ஏப்ரல் மாதத்தில் வேளாண்மைப் பணிகளைத் துவக்கவுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசிற்கு, விதைகளும், வேளாண்மைக் கருவிகளும் தேவைப்படுகின்றன என்றும், இவை இல்லையெனில் அந்நாடு பெரும் உணவு நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 15 இலட்சம் மக்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும் சூழலில், ஏப்ரல் மாதத்தில், விவசாயப் பணிகள் துவக்கப்படவில்லையெனில் இவ்வெண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.

உணவு உற்பத்தி குறைந்தால், தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப நினைக்கும் மத்திய ஆப்ரிக்க நாட்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கைக் குறையும், அதனால், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கவேண்டிய பன்னாட்டு சமுதாயத்தின் சுமையும் அதிகரிக்கும் என்றும் FAO நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போதைய அவசரக் கால தேவைகளுக்கென, FAO நிறுவனம், 62 இலட்சம் டாலர்கள் நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.