2015-03-20 15:26:00

வாழ்வின் நற்செய்தி திருத்தூது மடலின் 20ம் ஆண்டு நிறைவு


மார்ச்,20,2015. Evangelium vitae அதாவது வாழ்வின் நற்செய்தி திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் இம்மாதம் 24ம் தேதி ஓர் அனைத்துலக திருவழிபாடு நடைபெறும்.

மனித வாழ்வு என்ற தலைப்பில், திருப்பீட குடும்ப அவை ஏற்பாடு செய்துள்ள இத்திருவழிபாட்டில், மனித வாழ்வுக்கு ஆதரவாக, குறிப்பாக, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் மனித வாழ்வுக்கு ஆதரவாக ஆற்றிய மறைப்பணிக்காக நன்றி செலுத்தப்படும். அதோடு மனித வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டுமென்று செபிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் இத்திருவழிபாடு மூன்று பகுதிகளாக இடம்பெறும். முதலில், புனித மேரி மேஜர் பசிலிக்காவில் வாழ்வோடு தொடர்புடைய கலைகள் பற்றிய சிந்தனைகள் வழங்கப்படும். பின்னர் 6 மணிக்கு செபமாலை, அதன் பின்னர் 7 மணிக்கு திருப்பலியும் நடைபெறும். இச்செபமாலை பக்தி முயற்சி உலகின் முக்கிய திருத்தலங்களோடு இணைக்கப்ட்ட ஒரு பன்னாட்டுக் கூறைக் கொண்டிருக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.