2015-03-20 16:05:00

கடுகுச் சிறுத்தாலும்...: தாய்மையின் சிறப்பு


இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகைக் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்தக் காரை கையசைத்து நிறுத்தினார்.

“தம்பி ஆஸ்பத்திரி போகணும்”என்றார் அப்பெண்மணி.

“நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”என பதிலளித்தார் காரோட்டி.

“என் மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா” என கெஞ்சினார் அப்பெண்மணி.

“நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்” என்றார் அந்தக் கார் ஓட்டும் இளைஞர். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால்கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. மருத்துவமனையில், நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினார். அந்தக் கார் இளைஞரும் அமைதியாக அங்கே நின்றிருந்தார். ஒரு தாய் எவ்வளவு வேதனை அடைகிறாள் என்பதிலேயே அவரது சிந்தனை இருந்தது. இளைஞரின் மனது உறுத்தியது, தான் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த தவற்றை நினைத்து. சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்தார்.  

அந்தத் தாய், கார் இளைஞரிடம் “தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்” என பணத்தை நீட்டினார்.

“வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைச்சுங்கங்க” என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தார் இளைஞர். கைத்தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி,

“ஹலோ முதியோர் இல்லமா?” எனக் கேட்டார்.

“ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?” என கேட்டது மறுமுனை குரல்.

“மன்னிக்கவும். நாலு நாளைக்கு முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தரை உங்க இல்லத்துல சேர்த்தேன். அவுங்க அனாதை இல்லை, என்னப் பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக”.  முதியோர் இல்லப் பொறுப்பாளரின் அனுமதியைக்கூட கேட்காமல் கைத்தொலைபேசியை மூடிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு நகர்த்தினார் அந்த மகன்.

நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும், ஒரு மனிதரைப் பிரசவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.