2015-03-19 16:15:00

மத சார்பற்ற நிலை என்ற இந்திய உணர்வு சிதைந்து வருகிறது


மார்ச்,19,2015. பல்வேறு மத நம்பிக்கை கொண்டோரையும், மத நம்பிக்கை அற்றவர்களையும் வரவேற்கும் கலாச்சாரமே, இந்திய மண்ணுக்கு உரிய கலாச்சாரம் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.

வங்காளத்தில், 71 வயதான ஓர் அருள் சகோதரிக்கு நடைபெற்ற கொடுமையைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், மத சார்பற்ற நிலை என்ற இந்திய உணர்வு சிதைந்து வருவதைக் கண்டு, சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, நல்லுணர்வு கொண்ட இந்துக்களும் கவலை அடைந்துள்ளனர் என்று கூறினார்.

நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு வன்முறைக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று இந்திய பாராளுமன்றத்தில் கூறப்பட்ட கருத்தைப் பற்றி கேட்டபோது, அரசு எல்லா வன்முறைகளையும் அடக்க முடியாது என்பது தெரிந்தாலும், அத்தகைய வன்முறைகளைத் தூண்டும் வண்ணம் மேடைகளில் பேசப்படும் கருத்துக்களையாவது அரசு தடுக்கலாம் என்று கர்தினால் கிளீமிஸ் அவர்கள் பதிலிறுத்தார்.

இதற்கிடையே, வன்முறைக்கு உள்ளான அருள் சகோதரி, தன்னை வதைத்தவர்கள் அனைவரையும் தான் மன்னித்துவிட்டதாக ஊடகங்களுக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.