2015-03-19 15:57:00

அர்ஜென்டீனா பல்கலைக் கழகத்திற்கு திருத்தந்தை வாழ்த்து


மார்ச்,19,2015. கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், இயேசுவின் சக்தி, எண்ணங்கள், அவர் சொல்லித்தந்த பாடங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வீடியோ செய்தியில் வழங்கியுள்ளார்.

மார்ச் 18, இப்புதனன்று, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அயிரெஸ் நகரில், அர்ஜென்டீனா கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில், ஆலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. புவனோஸ் அயிரெஸ் பேராயரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கர்தினால் மாரியோ போலி அவர்கள் அந்த ஆலயத் திறப்புவிழா திருப்பலியை நிகழ்த்தியபோது, திருத்தந்தை அனுப்பிய வீடியோ செய்தி அங்கு ஒளிபரப்பப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள், பல்கலைக் கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனியே கட்டப்படுவதற்குப் பதில், பல்கலைக் கழகத்தின் மையமாக விளங்குவதே கிறிஸ்தவ கல்வியின் நோக்கம் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டீனா கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ள ஆலயம், பக்தர்களால் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே தன் ஆவல் என்று கூறி, திருத்தந்தை தன் வீடியோ செய்தியை நிறைவு செய்துள்ளார்.

திறக்கப்பட்டுள்ள புதிய ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் 5 திருப்பலிகளும், ஒரு மணிநேர ஆராதனையும் நடைபெறும் என்று, பல்கலைக்கழகத்தின் தலைவர், அருள்பணி விக்டர் பெர்னான்டெஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.