2015-03-18 16:45:00

திருத்தந்தையுடன் Taize அமைப்பின் தலைவர்


மார்ச்,18,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் புனித ஆண்டினை அறிவித்துள்ளதற்கு, Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு உலக அமைப்பின் தலைவர் சகோதரர் Alois அவர்கள் தன் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்தபோது, இறைவனின் இரக்கம் Taize அமைப்பினைத் தோற்றுவித்த சகோதரர், Roger அவர்களின் மனதுக்கு நெருங்கிய ஒரு கருத்து என்றும் கூறினார்.

இளையோரை ஒருங்கிணைக்கும் உலக இயக்கமான Taize குழுமத்தின் தலைவர், சகோதரர் Alois அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று சந்தித்த வேளையில் இவ்வாறு கூறினார்.

Taize குழுமத்தைத் தோற்றுவித்த சகோதரர் Roger அவர்கள் பிறந்ததன் முதல் நூற்றாண்டு வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அளித்தார்.

Taize குழுமத்தின் நிறுவனர், சகோதரர் Roger அவர்கள், திருத்தந்தையர் புனித 23ம் ஜான், முத்திப்பேறு பெற்ற 6ம் பால், மற்றும் புனித 2ம் ஜான் பால் ஆகியோரை ஒவ்வோர் ஆண்டும் சந்தித்து வந்தார் என்பதும், Taize குழுமத்தின் தற்போதைய தலைவர் சகோதரர் Alois அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.