2015-03-18 16:53:00

கடுகு சிறுத்தாலும் – நாம் நமக்காக மட்டும் பிறக்கவில்லை


வயதான ஒருவர் தான் இறக்கும் நேரத்தில் தனது நான்கு மகன்களையும் அழைத்து, பிள்ளைகளே, சொத்து என்று சொல்வதற்கு ஒரேயொரு பசுமாடு மட்டுமே என்னிடம் உள்ளது. ஒருநாளைக்கு ஒருவராக நீங்கள் அதன் பாலைக் கறந்து, அதை விற்று உங்கள் வாழ்வைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். அதோடு அவரது உயிரும் பிரிந்தது. மகன்களும், தந்தையின் சொல்படி பசுவின் பாலைக் கறந்து கொள்வதற்கு தங்களுக்கிடையே ஒப்புக்கொண்டனர். முதல் நாள் மூத்த மகன் பால் கறந்தார். ஆனால் பசுவுக்கு இரை போடவில்லை. நமக்கு ஏன் வீண் செலவு, நாளைக்கு பால் கறக்கும் தம்பி பசுவுக்குத் தீனி போடட்டும் என்று விட்டுவிட்டார். அடுத்தநாள் இரண்டாவது மகன் பால் கறந்தார். அவரும் பசுவுக்கு உணவளிக்கவில்லை. அவரும் தனது அண்ணன் போலவே நினைத்தார். இப்படி நான்கு மகன்களும் பசுவிடமிருந்து பாலை மட்டும் கறந்தார்களேதவிர, அதற்கு ஒருவராகிலும் இரை போடவில்லை. நாள்கள் கடந்தன. பசு இளைத்துக்கொண்டே போனது. மகன்களும் அதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. ஒருநாள் பசுமாடு இறந்துபோனது. பாலுக்கும் வழியில்லாமல் போனது. அப்பொழுதுதான் அந்த நான்கு மகன்களுக்கும் தங்களின் தவறு புரியவந்தது. தன்னலத்தால், இருந்ததையும் இழந்துவிட்டோமே என்று தங்களையே நொந்து  கொண்டார்கள். ஆம். தன்னல வாழ்வில் உறவு, நட்பு, மகிழ்வு, சொத்து சுகம் என அனைத்தையும் ஏதாவது ஒருநாளில் இழக்க நேரிடும். ”நமது வாழ்வின் முதன்மை நோக்கம் பிறருக்கு உதவுவது. பிறருக்கு உதவ இயலவில்லையென்றால் பிறரைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம்(தலாய்லாமா)”.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.