2015-03-18 15:13:00

கடுகு சிறுத்தாலும்.... : ஏமாற்ற நினைக்கும் பேராசை ஏமாறும்!


ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமல் அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று “இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றார்.  உடனே பிச்சைக்காரர், “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றார்.

இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் அந்த வைரவியாபாரி, “ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லையென்றால் வேண்டாம் “என்றார்.

“அப்படியானால் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்” என்றவாறே பிச்சைக்காரர் நடக்கலானார். வைர வியாபாரியோ, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50பைசாவிற்கு தந்துவிடுவார் என்ற எண்ணத்துடன் காத்திருந்தார். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன், “அட அடி முட்டாளே!  கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு மகிழ்ச்சியாகச் செல்கிறாயே! நன்றாக ஏமாந்து விட்டாய்“ என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரர், பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடனிருக்கிறேன். அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய்..!  இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!” என்றவாறே நடக்கலானார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.