2015-03-17 15:17:00

கடவுளின் நன்மைத்தனம் நம் இதயங்களை நிரப்புவதற்கு அனுமதிப்போம்


மார்ச்,17,2015. “கடவுள், தமது நன்மைத்தனம் மற்றும் கருணையோடு நம் இதயங்களை நிரப்புவதற்கு அவரை அனுமதிப்போம்” என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வருகிற சனிக்கிழமையன்று இத்தாலியின் Pompei செபமாலை அன்னை திருத்தலத்துக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி கருத்து தெரிவித்த Pompei பேராயர் Tommaso Caputo அவர்கள், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான திருத்தந்தையின் கண்டனத்தை தனது மறைமாவட்டம் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் பற்றியும் கூறிய பேராயர் Caputo அவர்கள், தென் இத்தாலி தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து இத்தாலிய திருஅவை எப்போதும் கருத்தாய் இருப்பதையும் குறிப்பிட்டார்.

மார்ச் 21, வருகிற சனிக்கிழமையன்று நேப்பிள்ஸ் நகருக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ள திருத்தந்தை, Pompei செபமாலை அன்னை திருத்தலத்துக்கும் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.