2015-03-14 15:50:00

பேரிடர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒருமைப்பாடு அவசியம்


மார்ச்,14,2015. உலகில் இயற்கைப் பேரிடர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஜப்பானின் சென்டைய்யில் நடைபெற்றுவரும் உலகத் தலைவர்கள் மாநாட்டில் இவ்வாறு உரைத்த பான் கி மூன் அவர்கள், உலகில் உண்மையாகவே பேரிடர்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் நாடுகள் மற்றும் சமுதாயங்களுக்குள் ஒன்றிப்புணர்வு தேவை என்று கூறினார்

ஜப்பானின் ஹியோகோவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பேரிடர் தடுப்பு ஒப்பந்தத்தை சீர்தூக்கிப் பார்த்து அதனை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. மார்ச் 18, வருகிற புதனன்று இம்மாநாடு நிறைவடையும்.

மேலும், தென் பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாத்துவில் இடம்பெற்ற கடும் புயலால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த Pam புயல் மழையால் கிராமங்கள் முழுவதும் அழிந்துள்ளன. இது, பசிபிக் பெருங்கடல் வரலாற்றில் இடம்பெற்ற கடுமையான புயல் எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.