2015-03-12 16:45:00

மே 23, பேராயர் ரொமேரோ முத்திப்பேறு பெற்றவராக அறிவிப்பு


மார்ச்,12,2015. இறையடியாரான பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், வருகிற மேமாதம் 23ம் தேதி, அதாவது, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவின் திருவிழிப்பு நாள், சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில் நடைபெறவிருக்கும் இந்தத் திருப்பலியை, புனிதர் பட்டப் படிநிலைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் தலைமையேற்று நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறையடியார், ரொமேரோ அவர்களை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்த, பேராயர் வின்சென்ஸோ பாலியா அவர்கள், இந்த சிறப்பு நாளை அறிவித்ததும், செய்தியாளர்கள் கூட்டத்தில் எழுந்த ஆரவாரமும், கைத்தட்டலும் பேராயர் ரொமேரோ அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது என்று, Avvenire இதழில் பணியாற்றும் Lucia Capuzzi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எல் சால்வதோர் நாடு சந்தித்த இராணுவ அடக்குமுறை இன்று இல்லையெனினும், போதைப் பொருள் வர்த்தகர்களின் பிடியிலிருந்து அந்நாடு விடுதலையடைய முத்திப்பேறு பெற்ற ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் பரிந்துரை தேவை என்று செய்தியாளர் Capuzzi அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.