2015-03-12 13:21:00

கடுகு சிறுத்தாலும் – இலட்சியவாதிகளின் தியாகம்


உலகப் புகழ்பெற்ற நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள் கடல்வழிப் பயணத்தில் வெறித்தனமாக இருந்த காலம் அது. ஆபத்தும், கடினமும் நிறைந்த அந்தப் பயணத்தில் அவருடன் செல்வதற்கு எவரும் முன்வரவில்லை. அதனால் கொள்ளையர்களையும், குற்றவாளிகளையும் அவருடன் அனுப்பி வைத்தனர். பயணத்தின் பாதிவழியில், உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவர், நம்மிடம் கைவசம் உள்ள உணவுப்பொருள்கள் நாம் ஊர் திரும்புவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளன, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் நாம் ஊர் திரும்புவதற்கான உணவுப் பொருள்கள் இருக்காது, அதனால் கப்பலை இப்படியே திருப்பி நாம் புறப்பட்ட இடத்துக்கே பயணத்தைத் தொடர்வோம் என்று சொன்னார். மற்ற மாலுமிகளும் அதற்கு ஒத்திணங்கினர். கொலம்பஸ் தனது இலட்சியத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. கப்பலிலே கொலம்பசைக் கைது செய்துவிட்டு ரொனால்ட்டை தலைவராக்கினார்கள். அப்போது கொலம்பஸ், தனது பயணக் குழுவிடம், ஊர் திரும்பும் நாள்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவையும் நீங்கள் எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள், நான் பட்டினி கிடக்கத் தயார், அந்த உணவின் துணைகொண்டு நாம் திட்டமிட்டபடி மேலும் ஒரு நாளோ, இரண்டு நாள்களோ பயணத்தைத் தொடர்வோம் என்று கெஞ்சிக் கேட்டார். அதுவும் நியாயமாகத் தெரியவே, பயணம் தொடர்ந்தது. அதற்கு இருப்பத்திநான்கு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அக்குழுவுக்குத் தட்டுப்பட்டது. ஆம். தியாகம் செய்யத் துணிந்தவர்கள் இலட்சியத்தை எட்டுகின்றார்கள்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.