2015-03-11 17:10:00

"மாறுவேடத்தில் வாழும் இயேசுவுக்கு உதவுங்கள்" - CRS நிதி


மார்ச்,11,2015. கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் துன்பங்களைத் தாங்கி வாழும் மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவை, மார்ச் 14, 15 ஆகிய நாட்களில், அந்நாட்டின் அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர் துடைக்கும் அமைப்பு, "மாறுவேடத்தில் வாழும் இயேசுவுக்கு உதவுங்கள்" என்ற பெயரில் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, அமெரிக்க ஆயர்கள் பேரவை ஆதரவு அளித்துள்ளது.

உலகெங்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி மக்களின் வழியாக, துன்புறும் இயேசுவுடன் நம்மையே இணைத்துக்கொள்ள தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான, பேராயர் Dennis Schnurr அவர்கள் கூறினார்.

சென்ற ஆண்டு, CRS அமைப்பினர் வழியாகத் திரட்டப்பட்ட நிதி, காசாப் பகுதியிலும், ஈராக் நாட்டிலும் வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்களின் துயர் துடைக்கும் முயற்சிகளுக்கு உதவியாக இருந்ததென்று, CRS அமைப்பைச் சார்ந்த ஒருவர் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.