2015-03-10 16:35:00

மத்தியக் கிழக்குப் பகுதி புனித தலங்களுக்கு புனித வெள்ளி நிதி


மார்ச்,10,2015. "மிகவும் துன்பகரமான வேளைகளில், கடவுள் நம் தந்தை; அவர் தன் குழந்தைகளை ஒருநாளும் கைவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்ற செய்தியை, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, துன்புறும் மத்தியக் கிழக்குப் பகுதியின் புனித தலங்களுக்கு உதவும் வகையில், புனித வெள்ளியன்று உலகம் முழுவதும் தலத்திருஅவைகளில் நிதி திரட்டப்பட உள்ளது என்ற அறிக்கையை, கீழை வழிபாட்டு முறை திருஅவைகளுக்கென பணியாற்றும் பேராயம் வெளியிட்டுள்ளது.

சிரியாவிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் பல இலட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் இன்றையச் சூழலில், நம் கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்தும் அழைப்பு, சக்திவாய்ந்த வகையில் எழுப்பப்படுகிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள அப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Leonardo Sandri அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் இன்று ஆயுதங்களின் ஓசை மேலோங்கி இருப்பதுடன், பேச்சுவார்த்தை மற்றும் இணக்க வாழ்வு குறித்த எதிர்பார்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதியின் புனிதத் தலங்களுக்கென மேற்கொள்ளப்படும் நிதி திரட்டலில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையையும், கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.