2015-03-07 16:04:00

மொசாம்பிக் தேசிய ஒற்றுமை பாதிப்புக்குஅரசியல்வாதிகள் காரணம்


மார்ச்,07,2015. மொசாம்பிக் நாட்டில் அரசியல்வாதிகளின் தன்னலம் மற்றும் அரசியல் பிளவுகளால் தேசிய ஒற்றுமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

மொசாம்பிக்  ஆயர் பேரவையின் நிரந்தரக் குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டினர் அனைவருக்கும் பெரும் சொத்தாகவும், மதிப்புமிக்கதாகவும் விளங்கும் நாட்டின் ஒற்றுமை, பேராசை குணம் கொண்ட சில அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார சக்தியால் அலைக்கழிக்கப்படுகின்றது என்று குறை கூறியுள்ளது.

நாட்டின் தேசிய ஒற்றுமையை எந்த ஒரு காரணத்துக்காகவும் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், பெரும்பாலான அரசு நிறுவனங்கள் அரசியல்மயமாகி வருவதால், தீர்மானம் எடுக்கும் நடைமுறையிலிருந்து பலர் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

வளமைமிக்க சிறுபான்மையினரின் நேர்மையற்ற நடத்தையால் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தெளிவாகப் பார்க்க முடிகின்றது என்றும், சுற்றுச்சூழல் முழுமையாகப் புறக்கணிக்கப்படுகின்றது, இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் ஒளிவுமறைவு நிலவுகின்றது என்றும் மொசாம்பிக் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.