2015-03-07 14:47:00

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சுத்தமாக இருப்பதும், சுத்தம் செய்து கொள்வதும் மனிதர்களின் அடிப்படைத் தேவை. மனிதர்கள் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வதை நாம் அறிவோம். தன்னையே சுத்தம் செய்து கொள்ளும் இயற்கையை மீண்டும் அசுத்தப்படுத்துவதில் மனிதர்களாகிய நம் பங்கு மிக அதிகம் என்பதையும் வெட்கத்துடன், வேதனையுடன் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

'சுத்தப்படுத்துதல்' என்பது தவக்காலத்தின் மைய இலக்குகளில் ஒன்று. புறத் தூய்மையைவிட, அகத் தூய்மையை வலியுறுத்தும் காலம், தவக்காலம். இத்தருணத்தில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்யும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. 'இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற இந்நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது (மத். 21:12-17; மாற். 11:15-19; லூக். 19:45-48; யோவா. 2:13-22). 'கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற சொற்றொடர், எனக்கு ஒரு குட்டிக் கதையை நினைவுக்குக் கொணர்கிறது:

தென் ஆப்ரிக்கா, இனவெறியில் மூழ்கியிருந்த காலம் அது. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கோவிலில் நுழைந்தார். அருகிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, அவரிடம் விரைந்து சென்று, "நில்! வெள்ளையினத்தவர் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழையமுடியும். நீ உள்ளே போகக்கூடாது!" என்று சொல்லித் தடுத்தார். கறுப்பின மனிதர் அவரிடம், "ஐயா, நான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்யவே போகிறேன்" என்று கூறினார். உடனே, அந்தக் காவல் துறை அதிகாரி, "அப்படியென்றால் உள்ளே போகலாம். ஆனால், அங்கு நீ செபித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தால், பின்னர், உனக்குத் தொல்லைதான்!" என்று எச்சரித்து உள்ளே அனுப்பினார்.

'கோவில்' என்ற பெயரில் நாம் எழுப்பியுள்ள அமைப்புக்களில் தேவையற்ற சங்கடங்களைக் குவித்துவைத்து, கோவிலின் தூய்மையைக் கெடுத்துள்ளோம். எனவே, நமது கோவில்கள் பல வழிகளில் தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். இத்தகையதொரு தூய்மையாக்கும் பணியில் அன்று இயேசு ஈடுபட்டார். எருசலேம் கோவிலைத் இயேசு ஏன் தூய்மையாக்கினார் என்பதைப் புரிந்துகொள்வது பயனளிக்கும். எருசலேமில் அன்று நடந்ததாக நாம் சிந்திக்கும் விவரங்களுக்கும், இன்று நாம் நடைமுறையில் காணும் பல விவரங்களுக்கும் நெருங்கிய ஒப்புமைகள் தெரிந்தால், நாம் இன்னும் ஆழமானக் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம்.

"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்" (யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்லவேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்தவேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும், யூதருக்குரிய தன் கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஏற்கனவே, அவர் 12 வயது சிறுவனாக, முதல்முறை எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அவர் கண்ட ஒரு சில காட்சிகள் அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்கு சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம்... எருசலேம் கோவிலில் ஏழைகள் அடைந்த துன்பங்கள். ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் பட்ட துன்பங்களை இயேசுவும் அடைந்திருப்பார். இறைவனைக் காணும் ஆர்வத்தோடு, அந்த ஏழைகள், ஆண்டு முழுவதும், சிறுகச் சிறுகச் சேமித்து, கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவர்கள் சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என  ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் கண்ணும்கருத்துமாய் அவர்கள் வளர்த்து, எடுத்து வந்த ஆடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறையைச் சுட்டிக்காட்டி, அவற்றை ஏற்க மறுத்தனர் குருக்கள். எனவே, அந்த ஏழைகள், கோவிலில், அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, புறா இவற்றை வாங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம், ஒரு புறா வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று. சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுளின் சாபத்தைப் பெறக்கூடும் என்ற அச்சத்தை, அந்த ஏழைகள் மீது குருக்கள் திணித்தனர்.

அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப்பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம் உரோமைய நாணயம். அந்த நாணயத்தைக் கொண்டு கோவில் காணிக்கையைச் செலுத்தக்கூடாது, ஏனெனில், அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, காணிக்கை செலுத்தும் அனைவரும், கோவிலுக்கு வெளியே இருந்த நாணயம் மாற்றுமிடங்களில், உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவில் நாணயங்களை வாங்கவேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் என்று அனைத்து வியாபாரங்களிலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது.

ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண வந்தால், இங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் உள்ளனவே; அவர்கள் தரிசிக்க வந்த இறைவன், அவர்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் இன்னும் தூரமாய் விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு அவர்கள் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.

இதே வேதனை, இதே புழுக்கம் யூதர் அல்லாத புற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில், வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச்சுற்றில். இந்த வெளிச்சுற்று புற இனத்தவர் அவை (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. புற இனத்தவர், வெளிச்சுற்றில் மட்டும் நின்று, இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. அந்த வெளிச்சுற்றில் கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த புற இனத்தவர், இறைவனைக் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்திருக்கவேண்டும். அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு, அவர்கள் வீடு திரும்பியிருக்கவேண்டும்.

ஏழைகளையும், புற இனத்தவரையும், வாட்டியெடுத்த கேள்விகள், வேதனைகள் இயேசுவையும் வாட்டியெடுத்தன. இந்த வேதனை கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், புற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.

பாஸ்கா விழா காலத்தில் எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வருவர் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான காணிக்கைகள் கோவிலில் மலைபோல் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய் இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த அந்த மனம் சாதாரண மனம் அல்ல... இறைமகன் இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர், தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமைதான். இந்தப் புதுமையை எண்ணி வியக்கும் அதே நேரம், மனித வரலாற்றில் நிகழ்ந்த பல மாற்றங்களும், புரட்சிகளும் தனி மனிதர்களின் துணிவிலிருந்துதான் துவங்கின என்ற உண்மையையும் நாம் உணர்வதற்கு இன்றைய நற்செய்தி வழி வகுக்கிறது.

கோபக்கனல் தெறிக்க இயேசு இந்தக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” (யோவான் 2: 19) என்ற சவாலை அவர்கள் முன்வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு கூறிய வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்த்தால், அது குழந்தைத்தனமான சவாலாகத் தெரிகிறது.

இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார் (யோவான் 2: 21). முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட அந்தக் கோவிலை, கடவுள், மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். அந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது; கடவுளை விலை பேசமுடியாது; கடவுளைக் காண்பதற்கு காசு ஒரு இடையூறாக இருக்காது; வெளிச் சுற்று, உள்சுற்று, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புறஇனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். எந்தத் தடையும் இல்லாமல் இறைவனைக் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகிய கோவில்கள், நம் உள்ளங்களில் தொடங்கி, உலகெங்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

கோவில் தூய்மையைப் பற்றிப் பேசும்போது, நாம் சமுதாயத் தூய்மையைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். சமுதாயத் தூய்மை என்பது பரந்து விரிந்த ஒரு கடலாக, பாலை நிலமாக, உயர்ந்த மலையாகத் தோன்றலாம். எனவே, முயற்சி எனும் பயணத்தின் முதல் அடியைக் கூட எடுத்துவைக்க முடியாமல் நாம் மலைத்துப் போய் நிற்கலாம். இருப்பினும், இன்று சமுதாயத் தூய்மையின் ஓர் அங்கத்தை மட்டும் சிந்திக்க முயல்வோம்.

இந்த ஞாயிறன்று சமுதாயத் தூய்மையைப் பற்றி பேசும்போது, பெண்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் உருவாகவேண்டிய தூய்மை, முதலிடம் பெறுகிறது. காரணம் என்ன? மார்ச் 8, இஞ்ஞாயிறன்று நாம் அனைத்துலக மகளிர் நாளைச் சிறப்பிக்கின்றோம்.

இத்தருணத்தையோட்டி, பி.பி.சி (B.B.C) தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த ஓர் ஆவணப்படம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Leslee Udwin என்ற பெண் உருவாக்கிய ஆவணப்படம் இது. "இந்தியாவின் மகள்" (India's Daughter) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் படம், 2012ம் ஆண்டு, டில்லியில், ஓடும் பேருந்தில், ஓர் இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கும், கொடூரமான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியக் கலாச்சாரத்தை, இந்திய சமுதாயத்தை, உலகினர் பார்வையில் களங்கப்படுத்துகிறது என்ற காரணம் காட்டி, இந்திய அரசும், அரசியல் தலைவர்களும் இப்படத்தை இந்தியாவில் தடை செய்துள்ளனர். இந்த ஆவணப் படம் தேவையா, இல்லையா என்ற கேள்வியைப் புறந்தள்ளுவோம். ஆனால், இந்தப் படம் மையப்படுத்தியுள்ள அந்த இளம்பெண்ணின் வழக்கு, இந்தியர்களின் மனசாட்சியை கீறியவண்ணம் உள்ளது என்பது உண்மை.

இந்த ஆவணப் படத்தையோ, இந்த வழக்கையோ பற்றி பேச்சு எழுந்தால், "ஏன் பழையக் குப்பையைக் கிளறவேண்டும்?" என்ற கேள்வி ஆங்காங்கே எழுகிறது. குப்பை என்று தெரிந்தும், அதை ஏன் மூடிவைக்க வேண்டும் என்று பதில் கேள்வியை எழுப்பலாம், அல்லவா?

பெண்களை தெய்வங்களாக கோவிலில் வைத்து வழிபடும் உலகக் கலாச்சாரங்களில், இந்தியா நிச்சயம் முதலிடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகையக் கலாச்சாரத்தில், நம் குடும்பங்களில், நாம் வாழும் பகுதிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குப்பை, மலைபோல் வளர்ந்து வருகிறதே! இந்தக் குப்பையின் நாற்றம், இந்தியச் சமுதாயத்தின் மூச்சை ஒவ்வொருநாளும் இறுக்கி வருகிறதே! குப்பையை, குப்பை என்று ஏற்றுக்கொண்டால்தானே அதை அகற்ற முடியும்?  

 

எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ய சாட்டையைச் சுழற்றிய இயேசு, இந்திய சமுதாயத்தில் மண்டிக்கிடைக்கும் பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்கொடுமைகள், பெண் சிசுக்கொலை ஆகிய குப்பைகளை அகற்ற, அனைத்துலக மகளிர் நாளன்று தன் சாட்டையை ஏந்தி வரவேண்டும்... நம் மனசாட்சிகளைத் தட்டி எழுப்பவேண்டும் என்று செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.