2015-03-07 15:45:00

தனிவரத்தை அல்ல, இயேசுவை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு


மார்ச்,07,2015. திருஅவையின் பாதை எவரையும் என்றென்றைக்கும் தீர்ப்பிடுவது அல்ல, ஆனால், நேர்மையான இதயத்துடன் தன்னிடம் கேட்பவருக்கு கடவுளின் கருணையைப் பொழிவதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் பாதை, வேலிகளைவிட்டு வெளியேறி, தொலைவில் வாழ்வோரைத் தேடிச் செல்வதாகும் என்றும் Communion and Liberation (CL) என்ற இத்தாலிய திருஅவை இயக்கத்தின் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை.

இந்த CL இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி இச்சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இம்மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறுபது ஆண்டுகள் கடந்தும் இவ்வியக்கத்தின் உயிர்த்துடிப்பு குறையாமல் உள்ளது என்று பாராட்டினார்.

CL இயக்கத்தைத் தோற்றுவித்த அருள்பணியாளர் Luigi Giussani அவர்களின் எழுத்துக்களும், ஆன்மீகமும் தனது சொந்த வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, திருஅவையின் அனைத்து ஆன்மீகத்துக்கும், தனிவரங்களுக்கும் இயேசுவே மையமாக இருக்கிறார், நம் அனைவரின் வாழ்விலும் இயேசு கிறிஸ்து ஒருவரே மையமாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.

இயேசுவின் காலத்தில் இருந்தது போன்று இன்றும் நம் வாழ்வு ஒரு சந்திப்போடு தொடங்குகின்றது, கருணை என்ற பண்பினால் நிறைந்தவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறிந்து கொள்கின்றனர் என்று கூறினார்.

CL இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு, இந்த இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணியாளர் Giussani அவர்கள் இறந்ததன் பத்தாம் ஆண்டு ஆகிய இரு நிகழ்வுகளின் அடிப்படையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இவ்வியக்கத்தில் ஐம்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.