2015-03-07 16:09:00

உலக மகளிர் தினம் - பாலியல் சமத்துவத்துக்கு அழைப்பு


மார்ச்,07,2015. உலகில் பாலியல் சரிசமநிலையில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், அரசியல், கல்வி வாய்ப்பு, ஊதியம் உட்பட பல துறைகளில் இன்னும் பாகுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.

மார்ச் 8ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளில் அரசியல் வாழ்வில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது, குழந்தை பிறப்பின்போது இடம்பெறும் இறப்புகள் குறைந்துள்ளன மற்றும் ஆரம்பக் கல்வி வாய்ப்பில் பாகுபாடுகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.

ஆயினும், உலகில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் பெண் என்றும், தற்போதைய விகித நிலை தொடர்ந்தால், பெண்கள் நாடாளுமன்றங்களில் சரிசமநிலைக்கு வர இன்னும் 81 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கூறினார் பான் கி மூன்.

உலக அளவில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டுப் பெண்கள் ஊதியத்தோடு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர், இந்நிலை, கடந்த இருபது ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது நாற்பது விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.