2015-03-05 15:50:00

நோய்த் தணிப்பு - கருத்தரங்கு உறுப்பினர்களுடன் திருத்தந்தை


மார்ச்,05,2015 நோய்த் தணிப்பதில் கவனம் செலுத்துவது, குறிப்பாக, நோயால் துன்புறுவோரைப் பேணுதல், மனிதராகப் பிறந்தோர் அனைவரின் அடிப்படை பண்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை, "வயது முதிர்ந்தோருக்கு ஆதரவு மற்றும் நோய்த் தணிப்பு கவனம்" என்ற தலைப்பில், மார்ச் 5, இவ்வியாழன் முதல், சனிக்கிழமை முடிய ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் 100க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோருடன் துணை இருப்பதே அவர்களுக்கு ஆற்றும் பெரும் சேவை என்று குறிப்பிட்டார்.

பெற்றோரை மதிக்கும்படி விவிலியம் வற்புறுத்திக் கூறும்போது, வயதில் முதிர்ந்த அனைவரையும் மதித்து, ஆதரிக்கவேண்டும் என்பதை இது நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நோய்த் தணிப்பதில் கவனம், உடல்துன்பத்தில் பேணுதல் போன்ற மனிதாபிமானச் செயல்களை இவ்வுலகம் படிப்படியாய் மறந்துவரும் வேளையில், இத்தகைய கருத்தரங்கினை வத்திக்கான் ஏற்பாடு செய்திருப்பது, கத்தோலிக்கத் திருஅவையின் விழுமியங்களை உலகறியச் செய்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார். 

தங்கள் வாழ்வின் இறுதியை நெருங்கியுள்ள வயது முதிர்ந்தோருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், மற்றும் மனநல, ஆன்மீக உதவிகள் ஆகியவை இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதென்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மரணத்தை நெருங்கிவிடும் முதிர்ந்தோரை ஆதரவின்றி விட்டுவிடும் உலகப் போக்கு, அவர்கள் வேதனையைத் தீர்க்க மருத்துவ உலகம் பரிந்துரைக்கும் சுருக்கு வழிகள் ஆகியவை இந்தக் கருத்தரங்கில் பேசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கு, இவ்வறக்கட்டளை நடத்தும் 21வது கருத்தரங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.