2015-03-05 15:44:00

"செல்வரும் இலாசரும்" - திருத்தந்தை ஆற்றிய மறையுரை


மார்ச்,05,2015. நமக்கு அருகில் வாழும் வறியோரைக் காண முடியாதவாறு உலகப் போக்கில் சிந்திக்கும் எண்ணங்கள், நம் ஆன்மாவை இருளில் புதைத்துவிடுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

"செல்வரும் இலாசரும்" என்ற உவமையை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், இவ்வுவமையில் சித்திரிக்கப்பட்டுள்ள செல்வரைக் குறித்து குறைகள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

உவமையில் கூறப்பட்டுள்ள செல்வரை இன்றையச் சூழலில் கற்பனை செய்தால், கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் அவர் வலம்வருவது போல் சிந்திக்கலாம் என்று கூறியத் திருத்தந்தை, உலக அவலங்களைக் காண விரும்பாமல், கறுப்புக் கண்ணாடிகளை உயர்த்திவிட்டு, தங்கள் உலகங்களிலேயே ஆழ்ந்துவிடுபவர்களை எண்ணிப் பார்க்கலாம் என்று எடுத்துரைத்தார்.

உலகப் போக்கில் சிந்திக்கும் மனம் கொண்டிருந்தால், நம்மைச் சுற்றி துன்பங்களில், தேவைகளில் இருப்போரைக் காணமுடியாமல் போகும் என்று தன் மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

உலகச் செல்வங்களிலேயே மூழ்கிவிடும் மனிதர்கள், தங்கள் சுய அடையாளமான பெயர் முதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுவர்; மாறாக, வறியவரான இலாசர், தன் பெயருடன் விண்ணகம் சென்றடைகிறார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகப் போக்கில் சிந்தித்து, இவ்வுலகையே நம்பி வாழ்ந்த செல்வருக்கும், இறைவனை நம்பி வாழ்ந்த இலாசருக்கும் வழங்கப்பட்டத் தீர்ப்புகளைக் குறித்தும் திருத்தந்தை தன் மறையுரையில் பகிர்ந்தார்.

இறுதித் தீர்வையின்போதும், ஆபிரகாம், 'மகனே', 'மகனே' என்று அந்தச் செல்வரை அழைப்பது, இறைவன் நம்மை என்றென்றும் அனாதைகளாக விடாமல் காப்பார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

மேலும், "செல்வங்களுடன் நாம் அதிகமாகப் பிணைக்கப்பட்டிருந்தால், நாம் சுதந்திரமாக இருக்கமுடியாது. நாம் அடிமைகளே" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.