2015-03-05 16:08:00

உலக மகளிர் நாளன்று காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய விருது


மார்ச் 05,2015. சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண்களும், நிகராகுவா நாட்டில் வேளாண்மையில் ஈடுபட்ட பெண்களும் காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய விருதினைப் பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

'நம்பிக்கையின் குரல்கள்' என்ற அமைப்பினரும், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பினரும் இணைந்து இவ்வியாழனன்று அறிவித்துள்ள இந்த விருது, மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மகளிர் நாளன்று வழங்கப்படும்.

'பெண்கள், முன்னேற்றத்தை விதைப்பவர்கள்' என்ற கருத்தில் இந்த விருதுகளுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Juana Bertha Duarte Somoza அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சிரியாவிலிருந்து எதிர்காலம் ஏதுமின்றி வெளியேறிய பெண்களுக்கு, Basmeh மற்றும் Zeitooneh என்ற அமைப்பினர், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தையல் கலையைக் கற்றுக்கொடுத்து, அப்பெண்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கையை வளர்த்ததனால், இந்த அமைப்பினர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகராகுவா நாட்டில் வேளாண்மையில் ஈடுபடும் பெண்கள், நிலவளம், தொழில், உற்பத்தி என்ற அனைத்துத் துறையிலும் கவனம் செலுத்தி, பெண்களின் சக்தியைக் கூட்டியதால், அக்குழுவினர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 8, கொண்டாடப்படும் உலக மகளிர் நாளன்று, வத்திக்கானில் நடைபெறும் ஒரு விழாவில், இவ்விருதுகளுடன் 10,000 யூரோக்களும் இவ்விரு குழுவினருக்கும் வழங்கப்படும் என்று இவ்வியாழன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.