2015-02-27 14:54:00

சிரியாவில் நெருக்கடியைக் களைவதற்கு உலகினருக்கு அழைப்பு


பிப்.27,2015. சிரியாவில் 12 அசீரிய கிறிஸ்தவக் கிராமங்களில் குறைந்தது பத்துக் கிராமங்கள், ஜிகாதிகள் என்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலைமை குறித்து கத்தோலிக்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்துவரும் சிரியா முதுபெரும் தந்தையர்கள், சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெறும் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கு அனைத்துலக சமுதாயம் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்துலக சமுதாயம், சிரியா நாட்டின் நெருக்கடியைக் களைவதற்கு சரியான வழியில் செயல்படாமல் இருப்பது அதிர்ச்சியாக இருப்பதாகவும், ஜிகாதிகளின் வன்முறைகளுக்குப் பலியாகிவரும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இதுவே நேரம் எனவும் மெல்கிதே கத்தோலிக்க முதுபெரும் தந்தை Gregoire Laham அவர்கள் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் இன அழிவை எதிர்நோக்குகின்றனர், அப்பகுதியின் நிலையான தன்மையும் அமைதியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.