2015-02-25 15:13:00

அருள்பணியில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டிய மன உறுதி - தியான உரை


பிப்.25,2015 திருத்தந்தையுடன் வத்திக்கான் அதிகாரிகள் பங்கேற்கும் ஆண்டு தியான உரைகளை வழங்கிவரும் அருள்பணி புரூனோ செகோந்தின் (Bruno Secondin) அவர்கள், கிறிஸ்தவ வாழ்வை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக வாழ அனைவரும், குறிப்பாக, திருஅவை ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Ariccia எனுமிடத்தில் அமைந்துள்ள Casa Divin Maestro என்ற தியான இல்லத்தில், பிப்ரவரி 22, இஞ்ஞாயிறு மாலை முதல், பிப்ரவரி 27 இவ்வெள்ளி காலை முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வத்திக்கானில் அவருடன் பணியாற்றும் கர்தினால்களும் ஆயர்களும் ஏனைய அருள் பணியாளர்களும் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாண்டு தியானத்தை வழிநடத்தும் அருள்பணி செகோந்தின் அவர்கள், விவிலியத்தில், அரசர்கள் முதல் நூலில் இறைவாக்கினர் எலியா, மன்னர் ஆகாபுவிடம் மேற்கொண்ட முயற்சிகளை சுட்டிக்காட்டிப் பேசுகையில், அருள்பணியில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டிய மன உறுதியைக் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.

பொய்வாக்கினர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட மன்னர் ஆகாபுவைப் போல இன்று பல அரசுகள் வழிமாறிச் செல்வதால் மக்கள் துன்புறுகின்றனர் என்றும், இந்நிலையில், அருள் பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பைத் துறந்து, துணிவுடன் வெளியேறி உண்மைகளை எடுத்துரைக்கவேண்டும் என்றும் அருள்பணி செகோந்தின் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.