2015-02-21 16:06:00

ஐரோப்பா-வளர்ந்துவரும் இனவெறி தடுத்து நிறுத்தப்பட கோரிக்கை


பிப்.21,2015.  ஐரோப்பாவில் சிறுபான்மையினர்க்கெதிரான போக்குகள் அதிகரித்துவருவது குறித்து எச்சரித்துள்ள அதேவேளை, இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி மனித விழுமியங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களைக் கேட்டுள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.

 

குடியேற்றதாரரைப் பயன்படுத்தி, கீழ்த்தரமான விளம்பரங்களையும், சுலோகங்களையும் EU ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக வெளியிடுவது, தங்களின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளும் சிலர்மீது தாக்கங்களை ஏற்படுத்தலாம், ஆனால் இக்காலத்தின் குழப்பமிக்க சவால்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று லக்சம்பர்க் பேராயர் Jean-Claude Hollerich  அவர்கள் கருத்து தெரிவித்தார்.

ஐரோப்பிய நீதி மற்றும் அமைதி அவைகளின் 2015ம் ஆண்டின் செயல்திட்டம் தொடங்கிய நிகழ்வில் இவ்வாறு உரைத்தார் பேராயர் Hollerich.

நீதி, அமைதி மற்றும் மனித மாண்பை மதித்தலை ஊக்குவிக்கும் நோக்கத்திற்குப் பணியாற்றுவதற்காக 1971ம் ஆண்டில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் இணைந்து    ஐரோப்பிய நீதி மற்றும் அமைதி அவையை ஏற்படுத்தின. இந்த அவை, ஒவ்வோர் ஆண்டும் தனது செயல்திட்டத்தை வெளியிடுகின்றது.

அரசியல் கட்சிகள், தேர்தல் காலங்களில் குறுகிய தேசிய ஆதாயங்களுக்குப் பரிந்துரைக்காமல், உலகளாவிய மனித விழுமியங்கள் மற்றும் தங்களுக்கு இருக்கும் அனைத்துலகக் கடமைகள்மீது ஆர்வம் காட்டுமாறு, ஐரோப்பிய ஆயர்களின் இந்த அவை அரசியல் தலைவர்களைக் கேட்டுள்ளது.  

ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.