2015-02-17 14:26:00

கடுகு சிறுத்தாலும் - சூழ்நிலை மாற்றமா? மனமாற்றமா?


உறங்கிக் கொண்டிருந்த ஓர் இளைஞரின் அறை, ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவர் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு தனிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ள வேண்டும்" என்று கடவுள் சொல்லிவிட்டு மறைந்தார்.

அடுத்த நாள் காலை அந்த இளைஞர் பாறையைத் தன் முழு வல்லமையோடு தள்ளினார். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று ஓராண்டு இந்த முயற்சியைத் தொடர்ந்தார் அந்த இளைஞர். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞர் முறையிட்டார்.

"மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்... உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்." என்றார் கடவுள்.

இளைஞர் தன்னையே ஒரு முறை பார்த்தார். அவர் உடல் முழுவதும், ஒவ்வொரு அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.

"பாறையைத் தள்ளுவதுதான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ மாற வேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்" என்றார் கடவுள்.

தள்ளுதல் என்று பொருள்படும் PUSH என்ற ஆங்கில வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்து என பார்க்கும் போது, PUSH என்ற வார்த்தையை Pray Until Something Happens என்று விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய்.

நமது செபங்களால் சூழ்நிலை மாற்றம் உருவாகலாம். அல்லது, சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் மனமாற்றம் உருவாகலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.