2015-02-10 15:30:00

கடுகு சிறுத்தாலும் - யாரோ, எங்கோ, என்றோ நல்லது செய்தால்


ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி, இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் இமயமலை போல் தெரிந்ததால், அவற்றைத் தீர்க்க எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவர் கடற்கரையில் எதையோ பொறுக்கி எடுத்து கடலில் எறிந்து கொண்டிருந்தார். அறிவாளி கூர்ந்து கவனித்தபோது, அந்த மீனவர் கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். "என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. மீனவர் அவரிடம், "கடல் நீர்மட்டம் குறைந்து விட்டதால், இந்த மீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டன. இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்" என்றார். "அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இந்தக் கடற்கரையில் பல்லாயிரம் மீன்கள் கரையில் ஒதுங்கியுள்ளன. இது போல் உலகத்தின் பல கடற்கரைகளில் பல கோடி மீன்கள் கரையில் ஒதுங்கியிருக்கக்கூடும். உம்மால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்?" என்று அறிவாளி கேட்டபோது, அந்த மீனவர், "எல்லா மீன்களையும் என்னால் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் இப்போது காப்பாற்ற முடிகிறதே" என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தார்.

யாரோ ஒருவர், எங்கோ ஓரிடத்தில், என்றோ ஒரு நாள் நல்லது ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் போதுமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.