2015-02-09 16:11:00

திருத்தந்தை : படைப்பைப் பாதுகாத்து மேம்படுத்த அழைப்பு


பிப்.09,2015. இறைவன் இவ்வுலகைப் படைத்தார், அதேவேளை, நம் பாவத்தால் அழிவுக்குள்ளானவற்றை இயேசு மீண்டும் படைத்தார் என இத்திங்களன்று காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துவக்க நூலில் இறைவன் இவ்வுலகைப் படைத்தது குறித்த பகுதியையொட்டி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, இறைவன் உலகைப் படைத்தார், நம் பாவத்தால் அழிவுக்குள்ளானவற்றை இயேசு மீண்டும் படைத்தார், அதேவேளை, அவ்வாறு படைக்கப்பட்டவைகளையும், விசுவாசத்தையும் தூய ஆவியார் பாதுகாக்கிறார் என கூறினார்.

இவ்வுலகைப் படைத்து இறைவன் நம்மிடமே ஒப்படைத்துள்ளார், அவ்வுலகை வளப்படுத்தவும், பாதுகாக்கவும் நமக்குக் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதை அழிப்பதற்கல்ல, மாறாக படைப்பை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கே நமக்கு அதிகாரம் உள்ளது, ஏனெனில் நம்மீது கொண்ட அன்பாலேயே அனைத்தையும் இறைவன் படைத்தார் என்றார்.

இயேசுவால் மீண்டும் படைக்கப்பட்டவைகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவரோடும் அவர் வழியாக இறைவனோடும் நாம் ஒப்புரவு கொள்ளவேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.