2015-02-05 15:48:00

அ.பணியாளர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது வதந்தி


பிப்.05,2015 ISIS தீவிரவாதிகளின் பிடியில் அருள் பணியாளர் ஒருவர் சிக்கியுள்ளார் என்ற வதந்தியைப் பரப்பி, மக்கள் மனதில் பயத்தை உருவாக்கவேண்டாம் என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

Paul Jacoub என்ற அருள் பணியாளர் கடந்த 8 மாதங்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததாகவும், அவர் அண்மையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்றும் ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அத்தகையப் பெயர் கொண்ட அருள் பணியாளர் ஒருவர், ஈராக் தலத்திருஅவையில் பணியாற்றியதே கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.

தவறான வதந்திகளைப் பரப்பி, மக்கள் மனதில் நம்பிக்கையைக் குலைப்பதால், தீவிரவாதிகளின் சக்தி கூடுமே தவிர, குறையாது என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரு துறவியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களிடம் தற்போது எந்த அருள் பணியாளரும் பிணையக் கைதிகளாக இல்லை என்பதையும் ஆசிய செய்திக்கு அளித்த குறிப்பில் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.